”கலர்கலராய்...ரகரகமாய் ”... பெங்களூருவை கலர்புல் ஆக்கிய ஓவியச் சந்தை!
பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற ஓவிய சந்தையில் குவிந்த மக்கள் வண்ண வண்ண ஓவியங்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 13வது ஆண்டு ஓவிய சந்தை நேற்று பெங்களூரு குமரகிருபா சாலையில் நடைபெற்றது. இந்த ஓவிய சந்தையை அமைச்சர் பரமேஸ்வர் தொடங்கிவைத்தார்.
பிறகு பேசிய அவர், "ஓவியங்கள் சமுதாயத்தின் நிறை மற்றும் குறைகளை எடுத்துக்காட்டுகிறது. சிந்தனைகள் ஓவியங்கள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது.
ஓவியங்களைப் பார்த்து வளர்ந்தேன்:
இது அற்புதமானது. எனது தந்தையும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். அதனால் நான் சிறு வயது முதலே ஓவியங்களை பார்த்தே வளர்ந்து வந்துள்ளேன். ஓவியங்கள் மீது எனக்கு தனி விருப்பம் உள்ளது.
கலைஞர்களை ஊக்குவிப்போம்:
ஓவிய சந்தை இவ்வளவு பெரிய அளவில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய ஓவியர்கள் இதில் கலந்துகொள்ள இந்த சந்தை ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த சித்ரகலா பரிஷத் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வளர்ந்துள்ளது. இது இன்னும் வளர வேண்டும். பொதுமக்கள் ஓவியங்களை வாங்கி கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்" என்று பேசினார்.
அமைச்சர் வாங்கிய ஓவியம்:
இந்த ஓவிய சந்தையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைஞர் வரைந்திருந்த ஒரு ஓவியத்தை அமைச்சர் பரமேஸ்வர் ரூபாய் 95 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினார்.
ஓவிய விற்பனைத் திருவிழா:
இந்த சந்தையில் 1,300க்கும் மேற்பட்ட ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டு குமரகிருபா சாலையின் இரு புறத்தில் தங்களின் ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்து விற்பனை செய்தனர். சுமார் 1000 கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஓவியங்களை வாங்குவதற்காக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர். இதனால் ஓவிய சந்தை திருவிழா போல் காட்சி அளித்தது.
பார்வையாளர்களை கவர்ந்த ஓவியங்கள்:
ரூபாய் 100 முதல் ரூபாய் 1 லட்சம் வரையில் விலை மதிப்பு கொண்ட வண்ண வண்ண ஓவியங்கள் இந்த சந்தையில் இடம் பெற்று இருந்தன. ஓவியம் வாங்க வந்த பார்வையாளர்களை அங்கேயே அமர வைத்து சில கலைஞர்கள் அழகான ஓவியத்தை வரைந்து கொடுத்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
குவிந்த வாகனங்கள்:
ஓவிய சந்தையை முன்னிட்டு குமரகிருபா சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாகனங்கள் வேறு சாலையில் திருப்பி விடப்பட்டன. காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இந்த ஓவிய சந்தை நடைபெற்றது. ஓவிய சந்தையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.