கைது செய்யப்பட்ட இடதுசாரி சிந்தனையாளர்களை வீட்டுக்காவலில் வைத்தால் போதும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: கைது செய்யப்பட்ட இடதுசாரி செயற்பாட்டாளர்களை செப்டம்பர் 6ம் தேதி வரை அவரவர்களின் வீடுகளில்தான் காவலில் வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின், பீமா கோரேகான் அஞ்சலி சம்பவத்தையடுத்து தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினர் நடுவே நடந்த கலவரம் தொடர்பாக புனே போலீசார் இப்போது கைது நடவடிக்கைகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நேற்று போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தாபர், தேவகி ஜெய்ன், பிரபாத் பட்நாயக், சதீஷ் தேஷ்பாண்டே மற்றும் மஜா தருவலா ஆகிய 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், கைதானவர்களுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புள்ளதாக ஆதாரங்கள் இருப்பதாகவும், 15 நாட்களுக்கு போலீஸ் காவலில் இவர்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். செப்டம்பர் 4ம் தேதிக்குள், சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பா மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், செப்டம்பர், 6ம் தேதிவரை, கைது செய்யப்பட்ட ஐவரையும் அவரவர் வீடுகளில் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர்.