சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி.. அரசியல் போராட்டத்தில் தினகரன் தரப்புக்கு பெரும் அடி!
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க சசிகலா கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது டிடிவி தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உறுதிசெய்தது.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்தார். எனவே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சசிகலாவுக்கு சிறை
ஆனால் சக குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சீராய்வு மனு
இந்த தண்டனையை எதிர்த்து சசிகலா உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நேற்று விசாரணை
சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இந்த வழக்கில் இன்னும் பல வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதால், நீதிபதி அறையில் இன்றி, நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முகுல் ரோத்தகி கோரிக்கைவிடுத்தார்.
உத்தரவு
இவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. கோர்ட்டில் வைத்து விசாரணை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டால் விசாரணை சில காலங்கள் நீடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இனிமேல் காலக்கெடு தேவையில்லை.
தினகரனுக்கு பின்னடைவு
சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் வாய்ப்பு இருப்பது தெரிந்தால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அது தர்ம சங்கடத்தை கொடுத்திருக்கும். ஆனால், சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அந்த எம்எல்ஏக்களுக்கு சசிகலா குறித்த அச்சம் தீர்ந்துவிட்டது. அதேநேரம், இனியும், சசிகலா&தினகரன் அணியை நம்பி பயனில்லை என கருதி இப்போது புதுச்சேரியிலுள்ள அதிமுக எம்எல்ஏக்களும் கருதக் கூடும். இது தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.