ஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளங்களை தாக்க தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு
ஜம்மு: இந்தியாவில் உள்ள முக்கிய விமானப்படை தளங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமாவில், சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் நுழைந்த இந்திய விமான படை தீவிரவாத முகாம்களை தாக்கியழித்தது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல அவந்திபோரா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது .
உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது விானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.