ரயில் கட்டணம் உயருகிறது.... பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரயில்வே பட்ஜெட் பிப்ரவரி 25-ஆம் தேதியும், பொருளாதார ஆய்வறிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 29-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை காரணமாகவும், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் வருவாய் குறைவு காரணமாக, ரயில்வே துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி கூடுதல் செலவு தேவைப்படுகிறது. இதன் காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. .