டோக்லாம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அஜித்தோவல் நாளை சீனா பயணம்!
பிரிக்ஸ் மாநாட்டின் போது டோக்லாம் பிரச்சனை குறித்து பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் திட்டமிட்டுள்ளார்.
டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டின் போது டோக்லாம் பிரச்சனை குறித்து பேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் திட்டமிட்டுள்ளார்.
இந்தியா சிக்கிம் சீனா எல்லையான டோக்லாம் பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனை தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் இந்தியா ராணுவத்தினரை குவித்துள்ளது.
இதனால் இந்திய- சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.
ஒரு பயணத்தில் இரு பணிகள்
இந்த மாநாட்டில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை சீனா புறப்படுகிறார். இந்த பயணத்தில் அஜித் தோவல் இரண்டு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
தீவிரவாதத்துக்கு எதிராக
அதாவது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி மற்றும் அயுத உதவி செய்யப்படுவதை எதிர்த்து போராட அவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
டோக்லாம் பிரச்சனை
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை தகர்க்க பிரிக்ஸ் நாடுகள் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியா - சீனா இடையேயான டோக்லாம் பிரச்சனையை அவர் எழுப்ப உள்ளார்.
பதற்றம் அதிகரிக்குமா?
இதனால் இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் மேலும் பதற்றம் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. டோக்லாம் பிரச்சனையில் இருநாடுகளின் நிலைப்பாட்டை அறிய இந்த பயணம் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.
நாளை பெய்ஜிங்கில்..
இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். பிரிக்ஸ் உச்சிமாநாடு பெய்ஜிங்கில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் நடைபெறுகிறது.