2 வருஷம் ஆடாவிட்டாலும் சி.எஸ்.கே ரசிகர்கள் வெறி அப்படியேதான் உள்ளது.. இந்த திருமண அழைப்பிதழே சாட்சி
சென்னை: ஐபிஎல் தொடரில் இரு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடாமல் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அந்த அணி மீது வைத்த அன்பு மட்டும் மாறவேயில்லை.
டோணி தலைமையிலான சிஎஸ்கே அணி, தமிழகத்து ரசிகர்களால் மட்டுமல்ல இந்தியாவின் மொத்த ரசிகர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு அணியாகும்.
அடுத்த வருடம் சிஎஸ்கே களமிறங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ஸ்டேடிய டிக்கெட் பாணியில் சிஎஸ்கே ரசிகர்கள் பிரிண்ட் செய்த திருமண அழைப்பு ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
சிங்கம்ல
மஞ்சள் நிற டிக்கெட்டில் மணமகன் மற்றும் மணமகள் பெயர்கள் சிஎஸ்கே சின்னமான சிங்கம் பின்னணியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்றதும் நினைவுக்கு வருவது இந்த சிங்கம்தான்.
வைரல் போட்டோ
சென்னையில், வளசரவாக்கம் பகுதியிலுள்ள ஸ்ரீகணேஷ் மகாலில் இம்மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக அந்த பத்திரிகையில் தகவல் உள்ளது. இருப்பினும், திருமண தேதியை மறைக்கும் வகையில் எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பத்திரிகை சுற்றி வருகிறது.
அன்பும், ஆசியும் போதும்
நுழைவு கட்டணம் என்ற இடத்தில் உங்கள் அன்பு என்றும், வரி என போடப்பட்டுள்ள இடத்தில் ஆசிகள் என்றும் எழுதப்பட்டுள்ளது. மொத்த தொகை எனும் இடத்தில் உங்களது வருகை என சென்டிமென்டாக போடப்பட்டுள்ளது.
கொண்டாட்டம்
முகூர்த்தம், வரவேற்பு என அனைத்துமே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு வழங்கப்படும் டிக்கெட் பாணியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தையே ஒரு ஐபிஎல் போல கொண்டாடுகிறது இந்த ஜோடி.