திருப்பதி எக்பிரஸில் கத்தி முனையில் பயணிகளிடம் கொள்ளை!
திருப்பதி: திருப்பதி ரயிலில் கத்திமுனையில் பயணிகளிடம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தால் பக்தர்கள் பதைபதைத்துப் போயுள்ளனர்.
திருப்பதியில் இருந்து செகந்திராபாத்துக்கு பத்மாவதி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை அனந்தபூர் மாவட்டம் குத்தி அருகே சென்று கொண்டிருந்தது.
அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது எஸ் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய 4 பெட்டிகளில் இருந்த மர்ம நபர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.
பின்னர், அவர்களிடம் இருந்து நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு கீழே குதித்து தப்பினர்.
இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். செகந்திராபாத் ரயில்வே போலீசில் புகார் செய்தனர். பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 28 ஆம்தேதி ஆந்திரா வந்த போது சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதுபோன்று கொள்ளை நடந்தது. எனவே, இந்த சம்பவத்திலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.ஓடும் ரயிலில் நடைபெறும் இத்தகைய கொள்ளை சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் நடந்த ரயில் கொள்ளை சம்பவங்கள் குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், சீமாந்திரா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளவருமான சந்திரபாபுநாயுடு பேட்டி அளித்தார்.
அப்போது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதற்கு மறுநாளே இதே போன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே தென் மத்திய ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தி பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.