திருப்பதியில் கொட்டும் வருமானம்... தெலுங்கானாவிலும் கோயில் கட்ட சந்திரசேகர ராவ் முடிவு
ஐதராபாத் : ஆந்திராவில் திருப்பதி கோயிலுக்கு இணையாக தெலுங்கானா அரசு ரூ. 800 கோடி செலவில் யதாத்ரி பகுதியில் மலை உச்சியில் கோயில் கட்ட முடிவு செய்திருப்பது விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கானாவில் தொடர்ச்சியாக விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில் கோயில் கட்ட இவ்வளவு கோடி ரூபாயை செலவிடுவதா என்ற விவாதம் நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இம்மாநில முதல்வராக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார்.
ஆந்திராவின் முதல்வராக தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு உள்ளார். ஆந்திர மாநிலத்திற்குள் உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இதன் பெருமை ஆந்திராவின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்து வருவது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவை உறுத்தி வருகிறது.
தெலுங்கானாவில் கடந்த 2014-15-ம் ஆண்டு ஜுன் மாதம் வரையில் 409 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. போதிய மழையின்மை, கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்த வண்ணம் உள்ளன
இந்த சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ், திருப்பதி கோயிலுக்கு போட்டியாக தெலுங்கானாவின் யதாத்ரி பகுதியில் மலை உச்சியில் ரூ.800 கோடி செலவில் கோயில் கட்ட நிதி ஒதுக்கியுள்ளார். இந்த முடிவு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வளவு கோடி பணத்தை வாரி இறைத்து கோயில் கட்டுவதற்கு பதிலாக அத்தொகையை விவசாயிகள் பிரச்னை தீர செலவிட்டு தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கோயில் முக்கியமா? விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்துவது முக்கியமா? என்ற விவாதம் தற்போது ஆந்திரா, தெலுங்கனா மாநிலங்களில் அனலைக் கிளப்பியுள்ளது.