எல்லாமே "லீக்" ஆகுது.. "காவலாளி" சரியில்லை.. போட்டுத் தாக்கும் ராகுல் காந்தி!
நாட்டின் காவலாளியான பிரதமர் வீக்காக இருப்பதால்தான் எல்லாம் லீக்காவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாட்டின் காவலாளியான பிரதமர் வீக்காக இருப்பதால்தான் எல்லாம் லீக்காவதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது. தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
காங்கிரஸ் விமர்சனம்
இந்நிலையில் சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா , கேள்வித்தாளை முன்கூட்டியே வெளியிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் அரசு என விமர்சித்துள்ளார்.
பேப்பர் லீக் அரசு
‘பேப்பர் லீக் அரசு' மத்திய அரசு பணியாளர் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு வினாத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
தகுதியற்ற அரசு
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சிபிஎஸ்இ சேர்மேன் அனிதா கார்வல் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வினாத்தாள்களை வெளியிட்டதன் மூலம் பிரதமர் மோடி அரசு தேர்வுகளை நடத்த தகுதியற்ற அரசாக மாறி விட்டது எனக் கூறினார்.
ராகுல் விமர்சனம்
மேலும் வியாபம், எஸ்எஸ்சி வினாத்தாள் லீக்கை தொடர்ந்து தற்போது சிபிஎஸ்இ பாடங்களுக்கான கேள்வித்தாள் வெளியாகியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் வீக்
அதாவது கர்நாடகா தேர்தல் தேதி லீக்கானது, சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கானது, எல்லாம் லீக்காகி கொண்டே இருக்கிறது. நாட்டின் காவலாளியான பிரதமர் வீக்காக உள்ளதே இந்த லீக்குகளுக்கு காரணம் என ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தண்டிக்கப்படுவார்கள்
இதனிடையே வினாத்தாள் வெளியான விவகாரத்தை துரதிஷ்ட சம்பவம் என குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவத்துள்ளார். மேலும் வெளியான 2 பாடங்களுக்கும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.