26 ஆண்டுகளாக சிறைவாசம்.. இன்னும் விடிவு பிறக்கலையே பேரறிவாளனுக்கு!
தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
சோனியா காந்தியின் பரிந்துரையால் நளினியின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மூவரின் தூக்கு தண்டனைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 ஆண்டுகளாக சிறை
இந்நிலையில் மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் எதற்கு என்று தெரியாமல் பேட்டரி வாங்கிக்கொடுத்த பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
உச்சநீதின்றத்தில் மனு
அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை காண 2 மாத பரோலில் வந்தார் பேரறிவாளன். அப்போது ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டி தமக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
மீண்டும் விசாரணை
விசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கைவிரித்த சுப்ரீம் கோர்ட்
அப்போது பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்று சி.பி.ஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பதில் அளிக்க உத்தரவு
வெடி குண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்குத் தர சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜனவரி 24ம் தேதி கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.