முன்கூட்டிய தேர்தலுக்கு வாய்ப்பில்லை.. ராஜ்நாத் சிங் புது தகவல்
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வராது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: திட்டமிட்ட காலத்தில்தான் பொதுத்தேர்தல் நடைபெறும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ஆகிய 4 மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
முன்கூட்டியே தேர்தலா?
இந்த தேர்தல்களுடன் சேர்த்து, நாடாளுமன்றத் தேர்தலையும் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என அடிக்கடி தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
உரிய நேரத்தில் தேர்தல்
"நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று பேசப்படுகிறது. ஆனால் அப்படி தேர்தல் நடத்துவதற்கான எந்த திட்டமும் கிடையாது. மேலும் அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின ஆட்சிக் காலம் உள்ளது. அதனால் உரிய நேரத்தில்தான் தேர்தல் நடைபெறுமே தவிர முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இல்லை.
தேர்தல் கமிஷன் ஆலோசனை
அதோடு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் ஒன்றாக நடத்திவிடுவற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமா என பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே இதுகுறித்து தேர்தல் கமிஷன்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதுகுறித்து, அரசியல் கட்சிகளிடம் கருத்துகேட்பு கூட்டமும் நடத்தி வருகிறது".
ராஜ்நாத்சிங் விளக்கம்
இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வராது என்று பரவி வதந்திகளுக்கும், சந்தேகங்களுக்கும் ராஜ்நாத் சிங், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.