2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி
2000 ரூபாய் செல்லாது என்கிற வதந்தியை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் விரைவில் செல்லாது என்கிற வதந்தியை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இதன்படி, அதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த உயர் மதிப்பு நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இந்த திடீர் நடவடிக்கையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
கருப்புப்பணம் பதுக்கல், கள்ள நோட்டு ஒழிப்பு போன்றவற்றிற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நிலைமையை சமாளிக்க 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் நிலைமை ஓரளவு சரியடைந்தாலும், இன்னமும் பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அச்சடிக்கப்பட்ட 2 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடாமல் வைத்திருப்பதாகவும், புதிய நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து விரைவில், 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது, இதனையடுத்து நாடு முழுவதும் 2000 நோட்டு விரைவில் செல்லாது என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் பல இடங்களில் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கலாம் என்கிற செய்தி வதந்தி என்றும், மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும், மத்திய அரசிடம் அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.