நாட்டில் மோடி அலை எல்லாம் இல்லை, கோப அலை தான் வீசுகிறது: கெஜ்ரிவால்
மும்பை: நாட்டில் மோடி அலை எல்லாம் இல்லை. மாறாக கோப அலை தான் வீசுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மும்பை விக்ரோலி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மோடி அலை
நாட்டில் மோடி அலை வீசுவதாக கடந்த ஆண்டில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஹரியானாவுக்கு சென்றேன். அங்கு மோடி அலை எதுவும் வீசவில்லை. உத்தர பிரதேசத்திற்கு சென்றேன். அங்கும் எந்த மோடி அலையையும் பார்க்கவில்லை. இன்று மும்பைக்கு வந்துள்ளேன். இங்கும் மோடி அலையை பார்க்க முடியவில்லை.
கோப அலை
ஆமாம், நாட்டில் ஒரு அலை வீசத் தான் செய்கிறது. அது மக்களின் கோப அலை. காங்கிரஸை நீக்கிவிட்டு பாஜகவை கொண்டு வர விரும்பவில்லை.
ஆம் ஆத்மி கட்சி
மக்கள் நாட்டின் நடைமுறைகளை மாற்ற விரும்புகிறார்கள். நேர்மையான அரசியல் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். மக்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் நம்பிக்கை வைத்துள்ளனர்.
டெல்லி
எங்களுக்கு டெல்லி சட்டசபை தேர்தலில் 4 முதல் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சில சேனல்கள் தெரிவித்தன. ஆனால் எங்களுக்கு 28 சீட்கள் கிடைத்தன.
ராகுல், மோடி
இந்த முறை நாடாளுமன்றத்தில் ஒரு அதிசயம் நடக்கவிருக்கிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, நரேந்திர மோடி, கபில் சிபல், நிதின் கட்காரி மற்றும் எதியூரப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.
விவசாயிகள்
குஜராத்தை முன்னேற்றிவிட்டதாக மோடி கூறி வருகிறார். ஆனால் அவர் ஆட்சியில் குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றார் கெஜ்ரிவால்.