காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை.. சதானந்தா கவுடா !
டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியிடம் சதானந்த கவுடா வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தமிழகத்துக்கு காவிரியில் இன்று (புதன்கிழமை) முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியிடம் சதானந்த கவுடா வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை என்று உமா பாரதியிடம் அவர் தகவல் கூறி உள்ளார்.