ரஜினி இலங்கை வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை.. அமைச்சர் ரவி கருணாநாயகே பேட்டி
ரஜினி இலங்கை வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயகே டெல்லியில் கூறியுள்ளார்.
டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு, லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குவார் என லைகா நிறுவனம், ரஜினியின் ஒப்புதலோடு அறிவித்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்ததுமே, இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தும் சிலர் எதிர்க்க ஆரம்பித்தனர்.
திருமாவளவன், வைகோ, ராமதாஸ், வேல்முருகன் போன்ற தலைவர்கள் ரஜினி தன் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வருவதில் எந்த பிரச்சினை இல்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கருணாநாயகே தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள கருணாநாயகே டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வர நினைத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. மிகவும் பிரபலமான ரஜினிகாந்த் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.