மகன் மீதான முறைகேடு குற்றச்சாட்டு.. முதல் முறையாக மவுனம் கலைத்தார் அமித்ஷா!
டெல்லி: மகன் ஜெய்ஷா மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை முதல் முறையாக மறுத்து பேட்டியளித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.
'திவயர்' இணையதளம் வெளியிட்ட ஆய்வு கட்டுரையொன்றில், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வந்த டெம்பிள் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 16000 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த கட்டுரையையடுத்து அரசியலில் புயல் வீசுகிறது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அமித்ஷா தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் கோரி வந்தது.
மவுனம் கலைத்தார் அமித்ஷா
இந்த நிலையில், டிவி சேனல் ஒன்றிடம் இன்று மவுனம் கலைத்துள்ளார் அமித்ஷா. அவர் கூறுகையில், "உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை நீதிமன்றம் கொண்டு செல்லுங்கள்" என்றார்.
கமாடிட்டி வணிகம்
ஜெய்ஷா செய்துவந்த தொழிலில் ஊழல் நடைபெறவேயில்லை. அவர் கமாடிட்டி வர்த்தகம் செய்து வந்தார். அது அதிக மதிப்பு மற்றும் குறைந்த லாபம் கொண்ட தொழில். அனைத்து பண பரிவர்த்தனைகளும் காசோலைகள் மூலம்தான் மேற்கொள்ளப்பட்டது. நிதி முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை.
லாபமும், வர்த்தகமும் ஒன்றல்ல
அமித்ஷா நிறுவனம் செக்யூரிட்டி இல்லாமலேயே லோன் பெற்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அது வழக்கமான கடன்தான் என்று அமித்ஷா தெரிவித்தார். வர்த்தகம் ரூ.1 கோடிக்கு நடந்தால், லாபமும் ரூ.1 கோடி கிடைக்கும் என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும். 16000 மடங்கு லாபம் உயர்ந்ததாக வெளியான தகவல் சரியில்லை.
நஷ்டத்தில் இயங்கிய கம்பெனி
ஜெய்ஷா நிறுவனம் ரூ.80 கோடி வரை லாபம் ஈட்டியபிறகு, ரூ.1.5 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்த நிறுவனம் மூடப்பட்டது. மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி அமைப்பிடம் ஜெய்ஷா நிறுவனம் கடன் பெற்றதை குற்றமாக கருத முடியாது. கடனில் சலுகைகள் எதுவும் பெறவில்லை. அவரது நிறுவனம், கமர்ஷியல் வட்டி விகிதத்தில்தான் கடன் பெற்றுள்ளது. இவ்வாறு அமித்ஷா அந்த பேட்டியில் தெரிவித்தார்.