மக்கள்தொகை பெருக்கத்தை குறைக்க அனைத்து தரப்புக்கும் ஒரே கொள்கை தேவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர்
நாக்பூர்: நம்பிக்கையின்மை அகன்று மக்கள் மத்தியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உதயமாகிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள, நாக்பூரில் இன்று காலை நடைபெற்ற, விஜயதசமி உற்சவ் நிகழ்ச்சியில் இவ்வாறு மோகன் பகவத் பேசினார். கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டும், அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன், மோகன் பகவத் உரையை நேரடி ஒளிபரப்பு செய்தது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில் மோகன் பகவத் பேசுகையில் "இந்தியா குறித்த மாற்று பார்வை உலகமெங்கும் விரிவடையத் தொடங்கியுள்ளது. உலகின் எந்த மூலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அங்கு இந்தியா சென்று உதவகிறது. நேபாளம், மாலத்தீவுகள், ஏமன் என எந்த நாடாக இருந்தாலும் உதவுவது இந்தியா.
உலகமெங்கும் இந்தியாவின் மதிப்பு சமீபகாலங்களில் கூடியுள்ளது. இந்திய மக்களிடையே கடந்த 2 வருடங்கள் முன்பு இருந்த அவநம்பிக்கை தற்போது மாறியுள்ளது. தங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே சமீபகாலங்களாக வந்துள்ளது.
மக்கள் தொகை பெருகிவருவது சீரியசான ஒரு விஷயம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு பெருகியுள்ள மக்கள் தொகைக்கு இந்தியாவால் உணவு தர முடியுமா என்பதை யோசிக்க வேண்டிய தருணம் இது. குழந்தை பிறப்பு வரமோ, சாபமோ.. ஆனால், மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்காக அனைத்து தரப்புக்கும் ஒரே மாதிரியான விதிமுறை வகுக்கப்பட வேண்டும்" என்றார்.
2 குழந்தைகள் திட்டத்திற்கு, முஸ்லிம்கள் ஒத்துக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், மோகன் பகவத் பேச்சு முக்கியத்துவம் பெருகிறது.
இதனிடையே பகவத் உரையை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்தது. கடந்த ஆண்டு இதேபோல நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதை விமர்சனம் செய்தன. ஆனால் செய்தியின் முக்கியத்துவம் கருதி நேரடி ஒளிபரப்பு செய்ததாக தூர்தர்ஷன் தரப்பு விளக்கம் தந்திருந்தது நினைவிருக்கலாம்.