கேள்வித்தாள் லீக் விவகாரம்: மறுதேர்வு இல்லை என சிபிஎஸ்இ அறிவிப்பு
கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
டெல்லி: 10-ஆம் வகுப்பு கணித தேர்வின் போது கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் டெல்லி, ஹரியானா மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது.
குறிப்பாக ஹரியானா மற்றும் டெல்லியில் இதுபோன்று கணித தேர்வுக்கான வினாத்தாள் லீக்கானது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்துக்கான மறுதேர்வு மீண்டும் நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதை மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் உறுதிப்படுத்தினார்.