பட்ஜெட்டில் எங்கள் திட்டங்களை பாஜக காப்பியடித்துவிட்டது: சோனியா காந்தி
டெல்லி: பாஜக அரசின் பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு சாதகமான அம்சங்கள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்கள் பலவற்றினை பாஜக நிதியமைச்சர் காப்பியடித்துள்ளார் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
2014-15ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சோனியா காந்தி
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி "பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை. எங்களுடைய திட்டங்களையே அவர்கள் தொடர்கின்றனர். சமூக துறைகளுக்கு மிக குறைந்த அளவிலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தொழிலதிபர்களுக்கு சாதகம்
இது தொழிலதிபர்களுக்கான பட்ஜெட், சாதாரண மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இல்லாத பட்ஜெட்
நாட்டின் வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே பட்ஜெட் போல இந்த பட்ஜெட்டும் இல்லாத பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி
பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் மேலும் வளர்ச்சி கீழ்நோக்கியே செல்லும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அம்பானி, அதானி பட்ஜெட்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. நவாப் மாலிக் கருத்து கூறுகையில் இந்த பட்ஜெட் அதானி மற்றும் அம்பானிக்கு சாதகமாக அமையுமே தவிர சாதாரண மக்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.