இனிமேலாவது பத்திரமா வச்சிக்கோ... திருடிய செல்போனை கூரியரில் ரிட்டர்ன் செய்த திருடர்ர்ர்ர்!!
இந்தூர்: திருடிய மூன்று போன்களையும் அதன் உரிமையாளருக்கு கூரியர் மூலம் திருப்பி அனுப்பியுள்ளான் மத்தியப்பிரதேசத்தில் திருடன் ஒருவன். கூடவே இனி மேலாவது போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவுரை வேறு.
கடந்த மாதம் 14ம் தேதி தனது ஸ்கூட்டரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்திருந்த தனது மூன்று செல்போன்களைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார் 22 வயதான கிராதிகா என்ற இளம்பெண்.
அவரின் புகாரின் பேரில் போலீசால் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கிராதிகாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூரியர் ஒன்று வந்துள்ளது. அனுப்பியவரின் பெயரில்லாமல் வந்த அந்த கூரியரைத் திறந்து பார்த்த கிராதிகாவுக்கு ஆனந்த அதிர்ச்சி.
காரணம் அதன் உள்ளே காணாமல் போன அவரது மூன்று செல்போன்களும், கூடவே ஒரு பேப்பரும் இருந்தது. அதில் ‘இனிமேலாவது செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்' என அறிவுரை கூறப்பட்டிருந்தது.
உடனடியாக இது தொடர்பாக போலீசுக்கு கிராதிகா தகவல் அளித்தார். அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது முகவரி மூலம் திருடன் போனைத் திருப்பித் தந்துவிட்டதாகக் கூறிய போலீசார், ‘திருடனை நாங்கள் கண்டு பிடித்து விடுவோம் என்ற அச்சத்தில் தான் அவன் அதனை திருப்பி அனுப்பி விட்டான்' எனத் தெரிவித்துள்ளனர்.