டிவி, லேப்டாப்களைத் திருடி ஆன்லைனில் கூவிக் கூவி விற்ற இளைஞர்... கைது
புனே: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள வீடுகளில் டிவி, லேப்டாப் ஆகியவற்றைத் திருடி அவற்றை ஆன்லைன் மூலம் விற்று வந்த பலே ஆசாமியை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
மின்னணு சாதனங்கள் தவிர நகைகளையும் இவர் திருடி வந்துள்ளார். இந்த நபருக்கு 22 வயதுதான் ஆகிறது. பெயர் பிரதிக் லிட்கர். அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் இவரது இலக்கு.
நீட்டாக டிரஸ் செய்து கொண்டு தேர்வு செய்த அடுக்குமாடிக் குடியிருப்புக் போவார் லிட்கர். அங்கு போய் எப்படியாவது அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் பாதுகாவலர்களை ஏமாற்றி உள்ளே புகுந்து விடுவார். பின்னர் ஒவ்வொரு மாடியாக ஏறுவார். அங்கு பூட்டிக் கிடக்கும் வீடுகளுக்குச் சென்று டூப்ளிகேட் சாவி போட்டு அவற்றைத் திறந்து உள்ளே புகுந்து விடுவார்.
பின்னர் அங்குள்ள லேப்டாப்கள், எல்இடி டிவி, கேமரா, தங்க நகைகள் என கிடைப்பதை எடுத்துக் கொள்வார். பிறகு எப்படியாவது வெளியேறி வந்து விடுவார்.
திருடிய பொருட்களை முதலில் கொங்கன் பகுதியில் உள்ள தனது நண்பர்களிடம் விற்று வந்தார். அதன் பின்னர் சற்று தொழிலை விரிவுபடுத்த ஆரம்பித்த அவர் ஆன்லைன் மூலம் விற்க ஆரம்பித்தார்.
இப்படியாக போய்க் கொண்டிருந்த லிட்கருக்கு ஜூலை 7ம் தேதி மிகப் பெரிய சத்திய சோதனையாக அமைந்து போனது. ஆம். அன்றுதான் அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 லேப்டாப்கள், 6 எல்இடி டிவி, 9 செல்போன்கள், 2 கேமராக்கள், தங்க நகைகள் என பொருட்களைப் பறிமுதல் செய்தனர் போலீஸார்.
விசாரணையில் அவர் மீது சங்க்வி போலீஸ் நிலையத்தில் 3, சின்சின்வாட், நிக்டி காவல் நிலையங்களில் தலா 2, போசாரி, போசாரி எம்ஐடிசி காவல் நிலையங்களில் தலா ஒன்று என வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.