சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்!
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டருகே 20 அடி நீள சுரங்கப் பாதை தோண்டி கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ வெள்ளியை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டை நிகழ்த்துவதற்காகவே கொள்ளையர்கள் புதிதாக வீடு வாங்கியது தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சுமித் சோனி. இவர் ராஜஸ்தானின் முடி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவராவார். இவர் 400 கிலோ வெள்ளியை இரும்பு பெட்டியில் பூட்டி வைத்து தரைதளத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளி நகைகள் சரியாக இருக்கின்றனவா என பார்த்தார். அப்போது 3 இரும்பு பெட்டிகளில் இருந்த வெள்ளி நகைகளை காணவில்லை.
2 அடி ஆழம்
இதையடுத்து பெட்டியின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் இருந்ததை கண்டு திடுக்கிட்ட மருத்துவர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து காணாமல் போன நகைகளின் எடை மற்றும் விலை குறித்த தகவல்களை மருத்துவர் போலீஸில் அளித்தார்.
தோண்டிய பள்ளம்
இந்த நகைகளை தரைதளத்தில் வைத்துவிட்டு அதன் மேல் டைல்ஸ் கொண்டு மூடப்பட்டிருந்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரின் வீட்டிலிருந்து பின்புறத்தில் உள்ள ஒரு வீடு வரை சுரங்கபாதை தோண்டப்பட்டிருந்ததை கண்டனர்.
4 அடி ஆழம்
பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்ததில் அந்த வீட்டின் ஒரு தளத்தை பெயர்து 4 அடி ஆழம், 20 அடி நீளத்தில் சுரங்க பாதை தோண்டப்பட்டது தெரியவந்தது. அந்த வீட்டை 90 லட்சத்திற்கு கடந்த ஜனவரி மாதம் திருடர்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. மருத்துவர் வீட்டில் திருடுவதற்காகவே இந்த வீடு வாங்கப்பட்டதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
எடை
இவர்கள் திருடிய நகையின் மதிப்பு கோடிக்கணக்காகும். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் தன்னிடம் இருந்த நகைகளின் எடை குறித்தோ அல்லது அதன் மதிப்பு குறித்தோ மருத்துவர் எந்த தகவலையும் சரி வர கொடுக்கவில்லை. இரும்பு பெட்டியின் அளவை கொண்டு நாங்களாகவே மதிப்பை கணக்கிட்டுள்ளோம் என்றனர்.