ஸ்னாப்டீல் நிறுவன ஊழியையை நேபாளத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்ட தேவேந்திரா: போலீஸ் திடுக் தகவல்
காசியாபாத்: ஸ்னாப்டீல் நிறுவன ஊழியை தீப்தி சர்னாவை கடத்திய தேவேந்திரா பற்றிய விபரங்களை காசியாபாத் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த தீப்தி சர்னா(24) குர்காவ்னில் உள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த தேவேந்திரா என்பவர் தீப்தியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை இரவு தீப்தியை கடத்தினார்.
கடத்தியவர் தீப்தியை 30 மணிநேரம் கழித்து பத்திரமாக திரும்பிச் செல்ல அனுமதித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காசியாபாத் போலீசார் தேவேந்திரா உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் தேவேந்திரா குறித்து போலீசார் கூறுகையில்,
* முக்கிய குற்றவாளியான தேவேந்திரா குருஷேத்ராவில் இருக்கும் சிறையில் இருந்து தப்பியோடியவர்
* சிறையில் இருக்கையில் தேவேந்திரா ஹிட்லரின் சுயசரிதையான மெய்ன் காம்பை படித்தார். அதில் இருந்து அவருக்கு ஹிட்லரை பிடித்துவிட்டது. அவருக்கு ஷாருக்கான் டர்ர் படத்தில் ஹீரோயினை பின்தொடர்வதும் பிடித்துள்ளது
* தேவேந்திரா தீப்தியை ஒருதலையாக காதலித்து பின்தொடர்ந்துள்ளார். அவர் தீப்தியை 150க்கும் மேற்பட்ட முறை பின்தொடர்ந்துள்ளார்.
* சைக்கோவான தேவேந்திரா திட்டமிட்டு தான் தீப்தியை கடந்த 10ம் தேதி கடத்தினார்
* கடத்திய பிறகு தனது கூட்டாளிகள் முன்பு தீப்தியிடம் தேவேந்திரா ஹீரோ போன்று நடந்துள்ளார். அந்த 4 பேரும் உன்னை எதுவும் செய்யவிடாமல் நான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார். அப்படியாவது தீப்தியின் அன்பை பெறலாம் என நினைத்துள்ளார்.
* தீப்தியை நேபாளத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து அங்கேயே செட்டிலாக நினைத்துள்ளார்.