காங்கிரஸை காப்பாற்றவே மூன்றாவது அணி: நரேந்திர மோடி தாக்கு
முசாபர்பூர்: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி என்பது காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று பாரதிய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேசினர்.
இக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
பீகார் மாநிலத்திற்கு அழைப்பை ஏற்று கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி வந்தேன். நான் வந்த போது பாட்னாவில் பல்வேறு இடங்களில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலியானர்கள் மற்றும் காயம் அடைந்தனர். இது பீகாருக்கு மட்டும் காயம் இல்லை நாட்டுக்கே ஏற்பட்ட காயம்.
ஆனாலும் பீகார் மாநில மக்கள் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தில் உறுதியாக உள்ளனர். ஒற்றுமை மற்றும் அமைதி இல்லாமல் இந்தியாவால் முன்னேற முடியாது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு எதிரான எச்சரிக்கைகளை பற்றி நான் கவலைப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி விரிவானது. நான் ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் அவரது மகன் சிராங் பாஸ்வானை நமது குடும்பத்திற்கு வரவேற்கிறேன்.
நாம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மற்றவர்களின் கவலைகள் மேலும் வளர்ந்து வருகிறது. நமது கூட்டணி தேசிய அளவிலான வளர்சிக்கான கூட்டணி.மூன்றாவது அணி என்பது என்ன? அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அளிப்பார்கள். அது காங்கிரஸை காப்பாற்றுவதற்கான அணி.. அந்த மூன்றாவது அணியால் நிலையான தலைவர்களை கொடுக்க முடியாது.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
பீகாரில் ஆண்டுதோறும் கலவரம்- பாஸ்வான்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய லோக் ஜனசக்தி தலைவர் பாஸ்வான், இந்திய நாட்டில் மக்கள் உண்ண உணவின்றி பசியோடு வசித்து வருகின்றனர். உங்களுடைய கஷ்டங்களை நாங்கள் துடைத்தெறிவோம். ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். சாதி ரீதியான அரசியலை கைவிடுங்கள். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்த தலைமுறையான எனது மகனும் நீங்களும் நன்றாக இருங்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த வரை நான் நல்லவன் என்றார்கள். ஆனால் அதிலிருந்து விலகியவுடன் கெட்டவன் என்கிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு கலவரம் கூட நிகழவில்லை. ஆனால் பீகாரில் ஆண்டுதோறும் கலவரம் நடக்கிறது என்றார்.