காங்கிரஸைக் காப்பாற்றுவது தான் 3வது அணியின் முக்கிய இலக்கு: மோடி குற்றச்சாட்டு
புவனேஸ்வர்: மூன்றாவது அணி என்பதன் முக்கிய இலக்கே காங்கிரஸைக் காப்பாற்றுவது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக பிரதம வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆங்காங்கே பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒடிசாவில் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று புவனேசுவரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி பேசியதாவது:-
மாநிலங்களை அழிக்கிறார்கள்....
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகள், ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் போன்ற மூன்றாவது அணியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர்கள் ஆட்சி செய்யும் அல்லது ஆட்சி செய்த மாநிலங்களை அழித்து வருகிறார்கள்.
மூன்றாவது அணி என்ற முகமூடி....
அந்த அணியில் உள்ள 11 கட்சிகளில் 9 கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளன. தேர்தலை சந்திப்பதற்காக அவர்கள் மூன்றாவது அணி என்ற முகமூடியை அணிந்து இருக்கிறார்கள். மூன்றாவது அணிக்கு ஒரே ஒரு வேலை தான் இருக்கிறது, அது காங்கிரசை காப்பாற்றுவது. அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுத்தரும் நேரம் வரும்.
பிஜூ பட்நாயக்குக்கு மரியாதை...
ஒடிசாவில் இருந்து ஏராளமானவர்கள் குஜராத் மாநிலத்துக்கு வந்து எனது சொந்த மாவட்டமான காஞ்சம் மாவட்டத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒடிசாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக்க சிறப்பாக பணியாற்றிய பிஜு பட்நாயக்குக்கு (முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை) எனது தாழ்மையான மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை மாநிலம்...
நான் இங்கு வாக்குறுதிகளுடன் வரவில்லை, ஆனால் அக்கறையுடன் வந்திருக்கிறேன். நவீன் பட்நாயக்கும், நானும் கடந்த 14 வருடங்களாக முதல்வர்களாக இருக்கிறோம். குஜராத்துடன் ஒப்பிடும்போது ஒடிசா மிகவும் பின்தங்கி இருக்கிறது. இங்கு மிகவும் மதிப்புள்ள இயற்கை வளங்கள் இருந்தும் ஏழை மாநிலமாகவே இருக்கிறது.
ஏழைகள் வளம்பெற...
பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்த மாநிலத்தில் அதிகமான வளர்ச்சிப் பணிகளை செய்யும். அதன்மூலம் இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இந்த மாநிலத்துக்கு திரும்புவார்கள். நான் உங்கள் முன் தலைவணங்குகிறேன். ஏழைகள் வளம்பெற உதவுவதற்கே எங்களது முதல் முன்னுரிமை ஆகும்.
கிழக்கில் வறுமை...
நாட்டின் மேற்கு பகுதி நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. கிழக்கு மாநிலங்கள் வறுமை, வளர்ச்சியின்மை ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்துகிறது. கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது, அல்லது மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் தலைவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.
பாடம் கற்கும் நேரம் இது....
உதாரணத்துக்கு உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற மாநிலங்களின் செயல்பாடுகளை மேற்கு மாநிலங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். கிழக்கு பகுதி, மேற்கு பகுதி போல வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மூன்றாவது அணி அமைக்க முயலும் கட்சிகளுக்கு மக்கள் பாடம் கற்றுத்தரும் நேரம் இது தான்.
வளர்ச்சிக்கு பா.ஜனதா...
மக்கள் காங்கிரஸ் திட்டங்கள், கம்யூனிஸ்டுகளின் திட்டங்கள், மாநில கட்சிகளின் திட்டங்கள், பாரதீய ஜனதா கட்சியின் திட்டங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டனர். இதில் சிறந்தது பாரதீய ஜனதாவின் திட்டங்கள் தான். அரசியல் மேதைகள், பொருளாதார நிபுணர்கள் இதனை ஒப்பிட்டு பார்த்து மக்களுக்கு அதிகம் செய்தது யார் என்பதை கூறவேண்டும். பாரதீய ஜனதாவின் திட்டங்கள் மட்டுமே வளர்ச்சிக்கு பொருத்தமானது என்று நான் பந்தயம் கட்டவும் தயாராக இருக்கிறேன்.
60 மாதங்கள் போதும்....
காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள். எனக்கு 60 மாதங்கள் மட்டும் கொடுங்கள், நான் வளர்ச்சியை கொண்டுவருகிறேன், இது உறுதி' என இவ்வாறு நரேந்திரமோடி உரையாற்றினார்.