தேர்தலுக்கு பிறகு மத்தியில் 3–வது அணி தான் ஆட்சி அமைக்கும்... பிரகாஷ் கரத் உறுதி
லூதியானா : லோக்சபா தேர்தலுக்கு பிறகு மத்தியில் 3-வது அணிதான் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்.
லோக்சபா தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து 3-வது அணி ஒன்றை அமைக்க கம்யூனிஸ்டு கட்சிகளும், சில மாநில கட்சிகளும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது அணிக்கு உயிரூட்டி வருகிறார் பிரகாஷ் கரத். இது தொடர்பாக நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது :-
நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. எனவே மத்தியில் மீண்டும் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதேபோல் பாரதீய ஜனதா கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், 3-வது அணிதான் ஆட்சி அமைக்கும்' என்றார்.
அப்படியானால் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசிடம் 3-வது அணி ஆதரவு கேட்குமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ‘மதசார்பற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதா? அல்லது வேண்டாமா? என்பது பற்றி அந்த கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்' என அவர் பதிலளித்தார்.
மன்மோகன் சிங் பற்றி அவரது முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்ஜய பாரு எழுதிய ‘விபத்தாக வந்த பிரதமர்' புத்தகம் பற்றி கேட்டதற்கு, அது அர்த்தமுள்ள கருத்துகளை கொண்ட புத்தகம் என்றும், ஆனால் இடதுசாரி கட்சிகள் பற்றி அவர் எழுதி இருப்பதை ஏற்க இயலாது என்றும் பதில் அளித்தார்.
முலாயம்சிங்கும் நம்பிக்கை..
பிரகாஷ் கரத்தின் கருத்தை போலவே சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கும் தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட முலாயம் சிங், ‘நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பதால், மத்தியில் அடுத்து 3-வது அணிதான் ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது பிரதமர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மத்தியில் 3-வது அணி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்' என்றார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்களில் 80 சதவீதம் பேர் சமாஜ்வாடி கட்சியை ஆதரிப்பதாகவும் மத்தியில் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் முலாயம் சிங் தனது பிரசாரத்தின் போது கூறினார்.
நரேந்திர மோடி பிரதமர் ஆவதை சமாஜ்வாடி கட்சியால் மட்டுமே தடுக்க முடியும் என அவர் தனது பேச்சின் இடையே கூறியது குறிப்பிடத்தக்கது.