இரு நாட்களில் 3 தீவிரவாதிகள் கைது.. இந்தியாவுக்கான அல்கொய்தா தலைவனும் சிக்கியதால் பரபரப்பு
டெல்லி: அல்கொய்தா தீவிரவாதி ஒருவன், உ.பி மாநிலம் சம்பல் பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த இரு நாட்களில் கைதான மூன்றாவது தீவிரவாதி இவன் என்பதால், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் நாட்டில் நாசவேலை நடத்த தீவிரவாதிகள் முயன்றுவருவதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லியில் உள்ள சீலம்பூர் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த இந்தியாவுக்கான, அல்கொய்தாவின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி பிரிவின் தலைவன் எனக் கருதப்படும் முகமது ஆசிப் (41) டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரின் ஜகத்பூரில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதரவாளரான அப்துல் ரகுமான் (37) ஒடிசா போலீசாரால் கைது செய்யப்பட்டான். இருவரிடம் இருந்தும் மொபைல்போன்கள், மடிக்கணினி, தீவிரவாத இயக்கங்களுக்கான ஆதரவு ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று ஒரு அல்கொய்தா தீவிரவாதி சிக்கியுள்ளான். இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் அந்த தீவிரவாதி ஆஜர்படுத்தப்படுவான் என்று தெரிகிறது.
இதில் முகமது ஆசிப் கைது மிகவும் முக்கியமானது. ஆசிப், 2014ம் ஆண்டு, தீவிரவாத பயிற்சியை முடித்து ஈரான் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது, கைது செய்யப்பட்டான். ஆனால் அல்கொய்தா மேலிடத்துடன் இருந்த நெருக்கத்தால், ஈரான் பிடியில் இருந்து தப்பிய ஆசிப், துருக்கி சென்றுள்ளான். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம், தனது இந்திய பாஸ்போர்ட்டை மிஸ் செய்துவிட்டதாகவும், இந்தியா அனுப்ப உதவுமாறும் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளான். இதை நம்பிய அதிகாரிகள் இந்தியாவுக்கு ஆசிப்பை அனுப்பி வைத்திருந்தனர். இந்தியாவுக்கு வந்து தீவிரவாத செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளான் ஆசிப்.