3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான்.... ம.பி. அரசு அதிகாரியின் 'அடடே' ஆரூடம்
போபால்: 3-வது உலகப் போர் உருவாகப் போவதே பசுக்களால்தான் என மத்திய பிரதேச அரசு அதிகாரியான அகிலேஸ்வரனானந்த் ஆருடம் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு பசுக்கள் மற்றும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. செத்த மாட்டின் தோலை உரித்தததால் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்; மாட்டிறைச்சி வைத்திருந்தால் தாக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர். பிரதமர் மோடி கூட பசுக்களை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் வெறித்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
3-வது உலகப் போர்...
இந்த நிலையில் மத்திய பிரதேச கால்நடை மேம்பாட்டு வாரிய தலைவர் மகா மண்டலேஸ்வர் சுவாமி அகிலேஸ்வரனானந்த், 3-வது உலகப் போரே பசுக்களால்தான் நடக்கப் போகிறது என்று ஒரு போடு போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
முதல் சுதந்திரப் போர்
பசுக்கள் எப்போதும் சர்ச்சைகளுக்கு காரணமாகவே இருந்து வந்துள்ளன. உதாரணமாக 1857-ம் ஆம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போர் வெடித்ததற்கு காரணமே பசுக்கள்தான்.
கோபம் வரும்..
பொதுவாக பசுக்களை நேசிப்பவர்களுக்கு அது இறந்து போனாலோ, காயம்பட்ட நிலையில் வண்டியில் ஏற்றினாலோ கடும் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக அவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்காமல் அந்த வாகனங்களை தடுத்து போலீசுக்காக காத்திருக்க வேண்டும்.
பசுவதை தடுப்பு சட்டம்
நாட்டின் அனைத்து மாநிலங்களுமே பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தினால் மாநில எல்லைகளின் வழியாக மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அகிலேஸ்வரனானந்த் கூறினார்.