20 தமிழர் படுகொலை- சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!!
டெல்லி: ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவில் திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதிக்கு சென்ற தமிழர்களை வழிமறித்து கைது செய்து கொடூர சித்ரவதைக்குள்ளாக்கி சுட்டுப் படுகொலை செய்து பின்னர் வனப்பகுதி ஒன்றில் ஆந்திரா போலீசார் வீசியிருப்பதை மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், 20 தமிழர் படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்;
உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆந்திராவில் காணாமல் போன தமிழக கூலி தொழிலாளர் பற்றி விசாரணை நடத்த வேண்டும்,
ஆந்திராவில் போலி என்கவுன்டரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஆந்திராவில் 2011 முதல் 9 தமிழர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.