மதானியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு... பெங்களூர் மருத்துவமனையில்!
இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்து. இதுகுறி்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணை மறுக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே சிறைவைக்கப்பட்டுள்ள மதானி, பெங்களூர் மல்லிகே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரித்த திருமாவளவன், சுமார் 3 மணி நேரம் மதானியுடன் நீண்ட உரையாடலை நிகழ்த்தினார்.
1990 களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வெளியான நூல்களைப் படித்து, அம்பேத்கரியத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட சிந்தனைத் தாக்கத்தால் தலித் மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடத் தொடங்கியதாகவும், கேரளாவில் பி.டி.பி.யின் சார்பில் பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெறச் செய்ததாகவும், தலித்-சிறுபான்மையோர்-பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமூகநீதி அரசியல் களத்தை உருவாக்கியதாகவும், பல்வேறு இடர்களையும் கடந்து இப்போதும் அந்தப் பயணத்தை உறுதியுடன் தொடர்வதாகவும் தனது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்தார் மதானி.
அதை அப்படியே தமிழ்நாட்டில் செய்துவருவதாகக் கூறினார் திருமாவளவன். பொய்வழக்கிலிருந்து விடுபட்டு விரைவில் வெளியே வர, மதானியை வாழ்த்திய திருமாவளவன், விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாகக் கூறினார்.
சந்திப்பின்போது, கட்சி பொருளாளர் மு.முகமது யூசுப், துணைப்பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், நிதிச் செயலாளர் ஜெ.முபாரக், கர்நாடக மாநிலப் பொறுப்பாளர் தலித் நாகராஜ், தஞ்சை இக்பால் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.