தமிழகத்தை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டார்: திருநாவுக்கரசர் சீற்றம்
டெல்லி: தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னரே அனுமதி பெறாமல் நிர்மலா சீதாராமனை பன்னீர் செல்வம் சந்திக்கச் சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களை சந்தித்த போது திருநாவுக்கரசர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டாலும் அதிமுகவினர், பாஜகவினரிடம் அடங்கி செல்வது தொடர்கதையாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி டெல்லி சென்ற, பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயனுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி விட்டு பன்னீர்செல்வத்தை சந்திக்காமலேயே தவிர்த்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தனது சகோதரர் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ராணுவ அமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க தனிப்பட்ட முறையில் டெல்லி வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார் பன்னீர் செல்வம். ஆனால் பன்னீர்செல்வத்தை சந்திப்பதையே நிர்மலா சீதாராமன் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.