ரூ. 7 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் : திருப்பதியில் சிக்கிய சீனா கடத்தல்காரர்!
செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனா வியாபாரியை ஆந்திரா போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி : திருவள்ளூர் அருகே செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த திருப்பதி போலீஸார், சீன வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள சிப்காட் குடோன் ஒன்றில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த திருப்பதி போலீசார் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் அவரது மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் சீனாவை சேர்ந்த லின்வின்புன் ஆகியோரை திருப்பதி அருகே உள்ள ஏர்பேடில் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். சீன வியாபாரி லின்வின்புன்னிடம் நடத்திய விசாரணையில், ஆபரணக்கற்கள் விற்பனை செய்வதாக விசா பெற்று, இந்தியா வந்து ஹவாலா மூலம் பணம் அனுப்பி செம்மரக்கட்டைகள் வியாபரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நாகூர்மீரான் என்பவரின் தந்தை மொகமதுவும் செம்மரக் கடத்தல் வியாபாரி என்பதும், அவர் இப்போது மலேசியாவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருப்பதி அடுத்த நாயுடுபேட்டை- பூதலப்பட்டு நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். சோதனையின் போது நிற்காமல் வேகமாகச் சென்ற வேன் ஒன்றை போலீசார் துரத்திச் சென்றனர். சுமார் 45 நிமிடம் துரத்தி சென்று ராமானுஜபள்ளி சோதனைச்சாவடி அருகே வேனை மடக்கி பிடித்தனர்.
வேனில் இருந்த டிரைவர் திருவண்ணாமலை போளூர் அருகே உள்ள இரும்பேலியைச் சேர்ந்த சங்கர் என்பவரையும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வேனையும், அதில் இருந்த 82 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருக்கும் செம்மரக்கட்டைகளை தமிழகக் கூலித்தொழிலாளர்கள் மூலம் வெட்டி, சீனாவிற்கு கடத்தும் வியாபாரம் பல ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்துவருகிறது. சமீபத்தில் கூட செம்மரக்கடத்தலில் ஈடுபடுவோரைத் தேவைப்பட்டால் என்கவுண்டர் செய்வோம் என்று ஆந்திர போலீஸார் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.