சபரிமலையில் சிறப்பு தரிசன திட்டம் ரத்து... தேவசம்போர்டு அதிரடி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு தரிசன திட்டம் ரத்து செய்யப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலையில் சிறப்பு தரிசன திட்டம் கைவிடப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளதால் விஜபிக்களும் இனி பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை வழிபட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடை மூலம் கிடைக்கும் பணத்தில் அன்னதானம் நடக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அன்னதான திட்டதிற்கு வரும் நன்கொடை குறைந்தது.
இதையடுத்து அன்னதான திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அன்னதானத்திற்கு ரூ.1000 செலுத்துவோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து அன்னதானத்திற்கு நிதி குவிந்தது. ஆனால் இப்படி சிறப்பு தரிசனத்திற்கு வருபவர்களால் மற்ற பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவெடுத்தது. இந்நிலையில் மாலை திருவழந்தபுரத்தில் தேவசம்போர்டு கூட்டத்தில் அன்னதானத்திற்காக நிதி அளிப்பவர்களுக்கு சிறப்பு தரிசனம் அளிக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் விஜபிக்களும் பக்தர்களோடு வரிசையில் காத்திருந்து தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.