திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கவில்லை.. காரணம் தெரியுமா?
Recommended Video
டெல்லி: திருவாரூர் மட்டும் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஏ.கே.போஸ். இவர் உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்டு 2-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. அங்கு அதிமுக, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.
திருவாரூர் தொகுதி
இதேபோல முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. அங்கும் மும்முனைப்போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான, மு.க.அழகிரியும் களம் காண கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதியம் பிரஸ் மீட்
ஒரு தொகுதி காலியானால், அதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான் இன்று மத்திய தேர்தல் ஆணையர் டெல்லியில் பகல் 3 மணியளவில் நிருபர்களை சந்திக்க உள்ளார் என்ற செய்தி காலை வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பு
மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல் குறித்து அப்போது அவர் அறிவிப்பு வெளியிட்டுவார் என்பதால் அப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்து.
இடைத் தேர்தல் தேதி இல்லை
ஆனால், பிற மாநிலங்களுக்கான சட்டசபை தொகுதி தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்தாரே தவிர, திருவாரூர் மட்டும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை.
காரணம் இதுதான்
இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகி, கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்று தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாகவும், எனவே, தேர்தல் தேதியை இன்று அறிவிக்காமல் மற்றொரு நாள் அறிவிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.