மூணாறு நிலச்சரிவு: வளர்த்தவர்களை தேடி அழும் செல்லப்பிராணிகள் - சிறுமியை மீட்க உதவிய நாய்
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்க வளர்ப்பு பிராணி ஒன்று உதவி செய்துள்ளது.
மூணாறு: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 வயது சிறுமியின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வளர்ப்பு நாயின் உதவியோடு சிறுமியின் உடல் மீட்டக்கப்பட்டுள்ளது. தனுஷ்கா என்ற 2 வயது சிறுமியின் வீட்டில் வளர்ந்த கூவி என்ற வளர்ப்பு நாயின் அழுகுரல் கேட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்த மீட்புக்குழுவினர் சிறுமியின் சடலத்தை மீட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி குடியிருப்பு பகுதியில் கடந்த 7 ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் மண்ணில் சிக்கினர். 11 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 58 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
12 பேர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் உடல்களை தேடும் பணி இரவும் பகலுமாக நீடிக்கிறது.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் தீவிர மீட்புப் பணிகள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் காணாமல் போனவர்கள் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறப்பு.. டோக்கன் சிஸ்டம்!
எஜமானர்களை தேடும் நாய்கள்
தங்களை வளர்த்தவர்களைத் தேடி சில நாய்கள் அங்கேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. இதில் கூவி என்ற நாய் நிலச்சரிவில் சிக்கிய தன்னை பாசத்தோடு வளர்த்தவர்களின் குழந்தையின் உடலை மீட்பதற்கு உதவி செய்துள்ளது.
மீட்க உதவிய நாய்
கடந்த வெள்ளிக்கிழமையன்று தனுஷ்கா என்ற 2 வயது சிறுமியின் வீட்டில் வளர்ந்த அந்த வளர்ப்பு நாய் ஒன்று கெமெட் பாலம் அருகே சுற்றிச்சுற்றி வந்து உரத்த குரலில் சத்தம் போட்டுள்ளது. எதையோ பிடித்து இழுக்க முயற்சி செய்தது. அதை கவனித்துக்கொண்டிருந்த மீட்பு படையினர் நாயின் அருகே சென்று பார்த்தபோது, தனுஷ்காவின் உடல் அங்கிருந்த மரக்கட்டையின் நடுவே சிக்கிக்கொண்டிருந்தை பார்த்தனர்.
கண்ணீர் விட நாய்
இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சிறுமியின் உடலை தூக்கிக்கொண்டு வரும்போது, கூவி மெல்லிய குரலில் அழுததாக சம்பவ இடத்தில் இருந்த இடுக்கி எம்பி டீன் குரியகோஸ் தெரிவித்துள்ளார்.
உயிரோடு இருக்கும் பாட்டி
தனுஷ்காவின் அப்பாவும், அம்மாவும் ஏற்கெனவே சடலமாக மீட்கப்பட்டனர். தனுஷ்காவின் சகோதரி பிரியதர்ஷினியை மீட்பு படையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். தனுஷ்காவின் 54 வயது பாட்டி மட்டும் உயிருடன் உள்ளார்.
12 பேர் மாயம்
ஞாயிறன்று நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சின்னத்தாய்,62 முத்துலெட்சுமி,22 என்ற இரண்டு பெண்களின் உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.