ஹோலியிலும் வந்தது அரசியல் சாயம்.. மோடி தண்ணீர் துப்பாக்கி... ராகுல் கலர் பொடி...
லக்னௌ: ஹோலிபண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பெயர்களில், வண்ணப் பொடிகளும், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கிகளும், பரபரப்பாக விற்பனையாகின்றன.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, வட மாநிலங்களிலும், வட மாநிலத்தவர்கள் வசிக்கும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மார்ச் மாத பவுர்ணமி நாளில், வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த திருவிழாவில், நண்பர்கள், உறவினர்கள், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை, பீய்ச்சி அடித்தும், பண்டிகையை, விமரிசையாக கொண்டாடுவர்.
ஹோலி பண்டிகைக்கு ஒருமாதம் முன்பாகவே கலர் பொடிகளை தயார் செய்யும் பணி தொடங்கி விடுகிறது. ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து விழா வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என எண்ணும் மகத்துவம் ஓங்கி நிற்பது இவ்விழாவின் சிறப்பாகும்.
ஹோலியில் அரசியல் சாயம்
இந்தாண்டின், ஹோலி பண்டிகை, தற்போது, துவங்கி உள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹோலி பண்டிகையிலும், தேர்தல் சாயம் காணப்படுகிறது.
மோடி- ராகுல் - கெஜ்ரிவால்
பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோர் பெயரில் கலர் பொடிகளும், தண்ணீர் பீச்சியடிக்கும் துப்பாக்கிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
ரூ.50 முதல் ரூ.300 வரை
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் பெயர்களில், வண்ணப் பொடிகளும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் துப்பாக்கிகளும், பரபரப்பாக விற்பனையாகின்றன. அலகாபாத்தில், வண்ணப் பொடிகளும், துப்பாக்கிகளும், 50 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
மோடி கலருக்கு கிராக்கி
'நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்ட, தண்ணீர் துப்பாக்கி, வண்ணப் பொடிகளுக்கு, அதிக கிராக்கி உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராகுலுக்கு 25 சதவிகித தள்ளுபடி
அதேசமயம் ராகுல் பெயரில் உள்ள துப்பாக்கிகள், வண்ணப் பொடிகளுக்கு, 25 சதவீத தள்ளுபடி கொடுத்து விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.