'செக்ஸ்' வச்சுக்காம இருந்து பாருங்க.. 100 வருஷம் வாழலாம்.. 120 வயது தாத்தாவின் அட்வைஸ்!
கொல்கத்தா: கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாத்தா தனது வயது 120 என்று கூறுகிறார். இத்தனை வயதாகியும் அவர் படு ஆரோக்கியமாக இருக்கிறார். சுறுசுறுப்பாக வேலைகள் பல செய்கிறார். நன்றாக நடமாடுகிறார். யோகா செய்கிறார். என்ன தாத்தா உங்களோட இளமை ரகசியம் என்று கேட்டால், மூனே மூனு விஷயத்தை மட்டும் கரெக்டா செஞ்சா போதும், நீங்களும் 100 வயதைத் தாண்டி வாழலாம் என்று சிரித்தபடி கூறுகிறார்.
அந்த மூன்று மேட்டர் என்ன தெரியுமா.. செக்ஸ்.. அதாவது செக்ஸ் வச்சுக்கவே கூடாதாம். 2வது மசாலாப் பொருட்களை சமையலில் சேர்த்துக் கொள்ளவே கூடாதாம். 3வது தினசரி தவறாமல் யோகா செய்து வர வேண்டுமாம். இதைச் செய்தால் நிச்சயம் 100 வயதைத் தாண்டி வாழலாம் என்று சொல்கிறார் தாத்தா.. அவருடைய பெயர் சுவாமி சிவானந்தா.
சுவாமி சிவானந்தா ஒரு யோகா குருவும் கூட. தினசரி பலருக்கும் யோகா கற்றுத் தருகிறார். இவரிடம் பலரும் யோகா கற்றுக் கொள்கின்றனர். யோகாதான் நமது ஆரோக்கியத்திற்கு முதுகெலும்பு போன்றது என்று கூறுகிறார் சிவானந்தா.
1896ல் பிறந்தவர்
சுவாமி சிவானந்தா 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்ததாக கூறுகிறார்கள். அவர் பாஸ்போர்ட்டும் வைத்துள்ளார். அதிலும் இந்த பிறந்த தேதிதான் போடப்பட்டுள்ளது.
மிகவும் வயதானவர்
இந்தியாவிலேயே மிகவும் அதிக வயது கொண்டவராக இவர்தான் இருப்பதாக சொல்கிறார்கள். உலக அளவிலும் இவர்தான் மிகவும் வயதானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் ஜிரோமென் கிமுரா என்பவர் இருந்தார். அவரது வயது 116 வருடம், 54 நாட்களாகும். அவர் தற்போது இறந்து விட்டார்.
ஆரோக்கிய வாழ்க்கை
ஆரோக்கிய வாழ்க்கைக்கு 3 முக்கிய விஷயங்களை சரியாகக் கடைப்பிடித்தாலே போதும் என்பது சிவானந்தா தாத்தாவின் அறிவுரையாகும். அது செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் வாழ்வது, தினசரி யோகா மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்க்காமல் இருப்பது ஆகியவைதான்.
வேற எதுவும் தேவையில்லை
இந்த மூன்றையும் சரியாக கடைப்பிடியுங்கள். உங்களது உடல் நிலையும், மன நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். 100 வயது என்ன, அதைத் தாண்டியும் வாழலாம் என்று சொல்கிறார் சிவானந்தா.
3 நூற்றாண்டுகளைப் பார்த்தவர்
இந்தத் தாத்தா 3 நூற்றாண்டுகளைப் பார்த்துள்ளார் என்பது விசேஷமானது, மிகவும் அரிய விஷயமும் கூட. தற்போது இவரது பெயரை கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைத்துள்ளனராம்.
சிம்பிள் சாப்பாடு
இவரது சாப்பாடு மிகவும் எளிமையானது. வேக வைத்த உணவைத்தான் சாப்பிடுகிறார். எண்ணெய், மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொளவதில்லை. அரிசி, வேக வைத்த பருப்பு, கொஞ்சம் போல பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வாராம்.
பால் குடிக்க மாட்டார்
பால் குடிக்க மாட்டாராம், பழங்கள் சாப்பிட மாட்டாராம். அவையெல்லாம் அலங்கார உணவுகள் என்பது இவரது கருத்தாகும். இளமையில் இவர் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்தவராம். வெறும் வயிற்றுடன்தான் பல நேரங்களில் தூங்குவாராம்.
கட்டைதான் தலையணை
இப்போதும் கூட அந்த எளிமையை அவர் விடவில்லை. தேவையான அளவுதான் சாப்பிடுவாராம். தரையில் பாயை விரித்து, கட்டை ஒன்றை தலைக்கு தலையணை போல வைத்துக் கொண்டுதான் தூங்குவாராம்.
கரண்ட் கண்டுபிடிச்சப்போ பிறந்தவர்
இவர் பிறந்த சமயத்தில்தான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது. கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டதாம். அப்போதெல்லாம் மக்கள் கிடைத்ததை வைத்து நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்ததாக சொல்கிறார் சிவானந்தா.
மக்களிடம் நிம்மதி இல்லை
ஆனால் இப்போது மக்களிடம் மகிழ்ச்சி இல்லை, நிம்மதி இல்லை, ஆரோக்கியம் இல்லை, மரியாதை குறைந்து விட்டது. இதெல்லாம் எனக்கு மிகவும் வலியைத் தருகிறது, வேதனையாக, கவலையாக இருக்கிறது என்று கூறுகிறார் சிவானந்தா.
நல்லாருங்கப்பா
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அன்பு, அமைதி நிலவ வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம் என்று சொல்கிறார் சிவானந்தா.
Image Credit: AFP phoos by Dibyangshu Sarkar