ஜனநாயகத்தை நம்பாதவர்களுக்கு கிடைத்த தோல்வி.. அகிலேஷ் யாதவ் பொளேர்
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கைரானா லோக்சபா தொகுதியில், பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில், இது ஜனநாயகத்தை ஏற்காதவர்களுக்கு கிடைத்த தோல்வி என உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் வர்ணித்துள்ளார்.
பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆளும் மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். மோடிக்கு பிறகு இந்துத்துவா அமைப்புகளால் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுவது இவருக்குத்தான்.
எனவே கைரானா லோக்சபா இடைத் தேர்தல் முடிவுகள் அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. இந்த தேர்தலில், ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில் போட்டியிட்ட தபசும் ஹசன் பாஜக வேட்பாளர் ம்ரிகங்கா சிங்கை 55,000 வாக்குகளுக்கும் மேல் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தபசும் ஹசனுக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆதரவு அளித்து தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே இந்த வெற்றியால் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கிடைத்த தோல்வி இது. பாஜகவுக்கு மக்கள் தக்க பாடத்தை கற்பித்துள்ளார்கள். மக்களுக்கு வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.