"இந்தியாவின் கடைசி டீ கடை" உங்களை அன்புடன் வரவேற்கிறது!
இந்தியாவின் கடைசி டீ கடை உத்தரகாண்ட் மாநிலம் மனா கிராமத்தில் இருக்கிறது.
சமோலி: நாட்டின் எல்லை கிராமங்களில் ஏதோ ஒரு சுவராசியம் இருக்கவே செய்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனா(திபெத்) எல்லையில் நாட்டின் கடைசி கிராமமான மனாவில் உள்ள டீ கடையில் "இந்தியாவின் கடைசி டீ கடை" என்கிற போர்டை பார்க்கலாம்.
மனா... இந்தியாவின் கடைசி கிராமம்... ஆனால் மற்ற எல்லை கிராமங்களை போல அல்லாமல் இதை உத்தரகாண்ட் அரசு சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்தியுள்ளது.
இந்தியா- சீனா எல்லையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இமயமலையின் இடுக்குகளில் இருக்கிறது இந்த கிராமம். மனா கணவாய்-க்கும் பத்ரிநாத்துக்கும் அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது.
பாண்டவர்கள் பாதை
கடல் மட்டத்தில் இருந்து 10,248 அடி உயரத்தில் இருக்கும் மனா இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். பாண்டவர்கள் சொர்க்கத்துக்கு இந்த மனா வழியாகத்தான் போனதாக ஒரு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.
பீமன் பாலம்
சரஸ்வதி நதியை கடக்க பீமனால் கல்பாலம் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிற பாலமும் இங்கே இருக்கிறது. மனா கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 600 பேர்தான்.
மங்கோலிய பழங்குடிகள்
இவர்கள் மங்கோலிய பழங்குடியினத்தின் கடைசி வம்சமான போடியா இன மக்கள். கடுமையான குளிர்காலத்தில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமோலிக்கு இடம்பெயர்ந்துவிடுகின்றனர். இந்த காலங்களில் பத்ரிநாத் கோவிலும் மூடப்படும். பத்ரிநாத் கோவில் திறக்கும் போது மனா கிராம மக்களும் திரும்பிவிடுவர்.
கடைசி டீ கடை
ஏராளமான டீ கடைகள் நிறைந்து கிடக்கிறது மனாவில்.. இந்தியாவின் கடைசி டீ கடை என்ற போர்டையும் பார்க்கலாம். அங்கு கொடுக்கப்படும் துளசி டீ அருமையான சுவை.
அதுமட்டுமல்ல இந்தியாவின் கடைசி ஒயின் ஷாப் என்கிற போர்டையும் கூட மனாவில் பார்க்க முடியும்!