கார்கில் போன்ற சூழல் எதுவும் இல்லை.. ராணுவத் தளபதி
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், கேரன் பகுதியில் கார்கில் ஆக்கிரமிப்பு நிகழ்வு போல எந்தச் சூழலும் தற்போது இல்லை. இந்தியப் பகுதி எதுவும் பாகிஸ்தானியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எந்த பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. அதையும், இதையும் ஒப்பிட முடியாது. கேரன் சம்பவம் ஒரு தீவிரவாத ஊடுறுவல்தான்.
கேரன் பகுதியில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்றும் பணியில் ராணுவத்தினர் 11 வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கார்கில் ஆக்கிரமிக்கப்பட்டது போல் தற்போது கேரன் பகுதியில் எந்த இந்திய கிராமமும் ஆக்கிரமிக்கப்படவில்லை. ஊடுருவிய தீவிரவாதிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்றார்.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலையில் சுட்டுக் கொன்றனர்.
குப்வாரா மாவட்டத்தின் வழியாக இவர்கள் பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்றனர். இதைப் பார்த்த ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி்த் தொடர்பாளர் தெரிவித்தார்.
கேரன் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு 30 முதல் 40 தீவிரவாதிகள் ஊடுறுவலை தொடங்கினர். அன்று முதல் ராணுவத்தினர் அவர்களை விரட்டியடிக்க போராடி வருகின்றனர். இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஊடுறுவலில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவுக்கு் தொடர்பு இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் தற்போது வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.