நாசிக்கில் கிடையாது.. ரூ.2000 நோட்டுக்கள் ரகசியமாக பிரிண்ட் ஆனது எங்கே தெரியுமா?
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாசிக்கை தவிர்த்து இன்னொரு நகரில் ரகசியமாக அச்சிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூர் : புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாசிக் தவிர்த்து தென் மாநிலம் ஒன்றில்தான் ரகசியமாக கடந்த ஆகஸ்ட். செப்டம்பர் மாதங்களில் அச்சிடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அண்மையில் அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிடப்பட்டன.
மோடியின் இந்த திட்டம் மிகவும் ரகசியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் மைசூரில் ரகசியமாக அச்சிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இங்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் உதவியுடன் அச்சகம் அமைக்கப்பட்டு 480 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அதே அளவிலான 500 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளது.
நாசிக், சல்போனி ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதுதான் வழக்கம். ஆனால் விஷயம் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக புதிய நோட்டுகள் மைசூரில் அச்சிடப்பட்டுள்ளன. இத்தாலி, ஜெர்மனி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பேப்பரில் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது மைசூரில் உள்ளதை போன்று சல்போனியில் ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் மேலும் ஒரு அச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அம்சமாக மங்கள்யான் செயற்கைகோளின் படமும் இந்த ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் கள்ள நோட்டுகளை உருவாக்க முடியாது என்றும் கூறப்பட்டுகிறது. 2000 ரூபாய் நோட்டில் 17 புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பார்வையற்றோருக்கு வசதியாக ரூபாய் நோட்டின் நடுவில் அசோக சக்கரமும் மகாத்மா காந்தியின் படமும் இடம்பெற்றுள்ளது.