“சிந்துவுடன் நான் போட்டோ எடுத்திருக்கேனே”... அம்மாவிடம் பெருமைப்பட்டுக் கொண்ட சல்மான்!
மும்பை: ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை டிவியில் பார்த்த நடிகர் சல்மான் கான், தனது தாயாரிடம், 'நான் சிந்துவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளேனே' எனப் பெருமையாகக் கூறினாராம்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து. வெற்றி மங்கையான அவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்களும், பரிசும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான் கானும் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்ற இறுதி ஆட்டத்தை தனது தாயாருடன் சேர்ந்து தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார்.
அப்போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதும், தனது அருகில் இருந்த தாயாரிடம் அவர், "நான் சிந்துவுடன் ஏற்கனவே போட்டோ எடுத்துள்ளேனே' என மகிழ்ச்சியும், பெருமையும் கலந்து கூறினாராம்.
இத்தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். கூடவே, சிந்துவுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சல்மான் கான் ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதர் ஆவார். இவர் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விளையாட்டுத் துறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என மற்ற துறை வெற்றியாளர்களை விட, சினிமா பிரபலங்களுக்கு உள்ள பெருமையே தனி தான். எனவே தான், அவர்களுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். நிஜத்தில் முடியாவிட்டாலும், நடிகர், நடிகையரின் கட் அவுட்டுடனாவது போட்டோ எடுக்க துடிப்பார்கள்.
அப்படிப்பட்ட சமூகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினி, தன்னை சிந்துவின் ரசிகர் என்று கூறியதும், சல்மான் சிந்துவுடன் போட்டோ எடுத்ததை பெருமையாகக் கூறியுள்ளதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது ஆகும்.