குடியரசு தின விழாவை ஐஎஸ்ஐஎஸ் சீர்குலைக்கலாம்.. எச்சரிக்கும் 'ஐபி'
டெல்லி: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சீர்குலைக்க வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையை உஷாரமாக இருக்குமாறும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்த மாதிரியான நடவடிக்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்பது குறித்து உளவுத்துறை தெரிவிக்கவில்லை என்ற போதும் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும், தடுக்கும் விதமான நடவடிக்கைகள் இருக்கலாம் என அது எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே கலந்து கொள்கிறார் என்பதால் பிரான்சுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான நடவடிக்கையில் ஐஎஸ் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் ஒன்றையும் மத்திய அரசு நடத்தியுள்ளது. அதில், குடியரசு தின விழாவின்போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் 67வது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு முக்கியமானது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சார உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலன்டே பங்கேற்கிறார். இதனால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படவுள்ளத.
பிரான்ஸ் சமீப காலமாக தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையினரின் தாக்குதலில் பிரான்ஸும் ஈடுபட்டிருப்பதால் தீவிரவாதிகளின் வெறுப்புப் பட்டியலில் பிரான்ஸும் இடம் பெற்றுள்ளது.
பாரிஸ் நகரில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. எனவே பிரான்ஸ் அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதால் குடியரசு தின விழாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆபத்து நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.
உள்ளூரைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மூலம் சலசலப்பை ஏற்படுத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் உஷார் நிலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.