படித்தால்தான் மேதையா... இணையத்தில் வைரலாகும் ‘ஷூ’ டாக்டர்!
செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர், ஷூ மருத்துவர் என்ற பேனருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப் புகைப்படத்தை மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்தப் படத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் மருத்துவமனை வாசலில் இருக்கும் குறிப்புகள் இருக்கின்றன.
அதாவது, அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியின் பெயரான நரசிம்மன், 'ஷூ டாக்டர்’ என்ற அடைமொழியுடன் உள்ளது. கூடவே, இங்கே காயமடைந்த ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். பார்வை நேரம் காலை 9 மணி முதல் 1 மணி வரை. லஞ்ச் டைம் 1 முதல் 2 மணி வரை. மீண்டும் 2 முதல் மாலை 6 மணி வரை ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும் என எழுதப்பட்டுள்ளது.
அதோடு, சிகிச்சைக்கு வரும் ஷூக்களுக்கு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், நோயாளிகள் (ஷூக்கள்) பொறுமை காக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படமானது வாட்ஸ் அப் மூலம் ஆனந்த் மகேந்திராவுக்கு கிடைத்துள்ளது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் இந்த மார்க்கெட்டிங் உக்தியைக் கண்டு வியந்துபோன ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
அதோடு, 'இந்த மனிதர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இருக்க வேண்டியவர். இவருக்காகவே சிறிய முதலீடு அளிக்க விரும்புகிறேன். இந்த புகைப்படம் யார் எடுத்ததோ எங்கு எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யாராவது அறிந்திருந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள்' என தன் டிவிட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மகிந்ராவின் ட்வீட் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 2,800 பேர் ஷேர் செய்துள்ளனர்.
செருப்புத் தைக்கும் தொழிலாளி நரசிம்மன், தனது புத்திசாலித்தனமான ஐடியாவால் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார்.