உபியில் பிரசாந்த் கிஷோராலும் காப்பாற்ற முடியாத காங்கிரஸ்… உதவி இல்லாமல் பஞ்சாப்பை கைப்பற்றிய கேப்டன்
உத்திரபிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்து வெளியான முடிவுகள் காங்கிரஸ் உபியில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் வியூகத்திற்காக பிரசாந்த் கிஷோரை நி
டெல்லி: தேர்தல் நேரம் என்றால் பெரும் கிராக்கி ஆகிவிடும் பிரசாந்த் கிஷோருக்கும் உபி தேர்தல் பெரும் தோல்விதான். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார ஆலோசகரான அவர் அளித்த ஆலோசனைகள் எதுவும் உபி தேர்தலில் எடுபடவில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி, அங்குள்ள சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பிரசாந்த் கிஷோர்தான் ஐடியா கொடுத்தாராம்.
ஏற்கனவே அப்பா, மகன், சித்தப்பா என அடித்து செத்துக் கொண்டிருந்த கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்தற்கான தண்டனையை தற்போது நன்றாகவே காங்கிரஸ் கட்சி அனுபவித்து வருகிறது. இந்தக் கூட்டணியால் லாபம் அடைந்தது என்னவோ பாஜகதான்.
மோடியின் வெற்றியின் பின்னால்…
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கும் அவர் பெற்ற வெற்றிக்கும் முக்கியமான கருவியாக திகழ்ந்த பிரசாந்த் கிஷோர், பிகார் தேர்தலிலும் நிதிஷ் குமார் பக்கபலமாக இருந்து ஆலோசனை வழங்கினார்.
படுதோல்விக்கு ஆலோசனை
அதே போன்றே உத்தரபிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சார ஆலோசனைகளை வழங்கினார் பிரசாந்த் கிஷோர். ஆனால் இந்த முறை கிஷோரும் சேர்ந்தே தோல்வியை சந்தித்துள்ளார். இவர் அளித்த ஆலோசனையின் படிதான் காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. என்றாலும் வெறும் 7 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்று அவமானகரமாக தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும், காங்கிரஸ் கட்சியின் குடும்ப தொகுதிகளாகவே கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளையும் காங்கிரஸ் இழந்துள்ளது மிக மோசமானத் தோல்வியாகக் கருதப்படுகிறது.
ஐடியாக்கள்
பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி தேர்தலை சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினாராம். ஆனால் அதனை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது. இல்லை என்றால் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளுமாறும் கிஷோர் மாற்று ஐடியாக்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினாராம். அதனையும் மறுத்துவிட்டதாம் கட்சியின் தலைமை.
சர்வாதிகாரி கிஷோர்
இதுதவிர, பிரசாந்த் கிஷோருக்கு உத்திரபிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவருடன் பல பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உ.பி. காங்கிரஸ் உறுப்பினர்கள், கிஷோரை ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக குற்றம்சாட்டியதை எதிர் கொள்ள வேண்டியிருந்தாக கிஷோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கேப்டனின் வெற்றி
பஞ்சாப் மாநிலத்திலும் பிரசாந்த் கிஷோர் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்ததாம். கேப்டன் அம்ரிந்தர் சிங்குடன் கிஷோருக்கு நேரடியாக பல பிரச்சனைகள் இருந்ததால் அம்ரிந்தர் சிங், இவரை கிட்ட நெருங்க விடவில்லை. ஆனாலும் பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதனால் இந்த வெற்றி கிஷோரை சென்று சேராது. மாறாக கேப்டன் அம்ரிந்தர் சிங்கை சேரும்.