புதிய இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர் மோடி புகழாரம்
புதிய இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி : புதிய இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கிலும், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
2018-19ம் ஆண்டிற்காக மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், பல்வேறு எதிர்பார்ப்புகளை பட்ஜெட் அறிவிப்பு எழுப்பி இருந்தது.
இந்நிலையில், பட்ஜெட் உரைக்கு பின் பேசிய மோடி இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் இது அமையப்பெற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி செய்யும் . இந்த பட்ஜெட் அறிவிப்பில் சொல்லி இருப்பதைப் போல, விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்து சேரும்.
விவசாய விளைபொருட்களுக்கான ஆதாரவிலை மாநில அரசுகளின் பரிசீலனைக்குப்பின்பே நிர்ணயிக்கப்படும். கிராமப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.
சுகாதாரத்திற்காக அறிவிக்கப்பட்டு உள்ள ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி மக்களுக்கு மருத்துவ உதவி பெறுவார்கள். இந்த பட்ஜெட்டின் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் நன்மை பெறுவார்கள். இதன் மூலம் புதிய இந்தியாவின் கரங்கள் வலுப்பெறும் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.