பணி நிரந்தரம் கோரி... 4 மணி நேரம் பாம்பு அறைக்குள் புகுந்து போராட்டம் நடத்திய ஊழியர்!
திருவனந்தபுரம்: வேலையை நிரந்தரமாக்கக் கோரி, கேரளாவில் உயிரியல் பூங்காவில் பாம்புகளுடன் பல மணி நேரம் தங்கி ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஊரும் விலங்கினங்களைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார் ஹர்ஷத் (40). கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலை பார்த்து வருகிறார் அவர்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி 20 பாம்புகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார் ஹர்ஷத். அரசு தனது வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர் மேற்கொண்டார்.
சுமார் நான்கரை மணி நேரம் அந்த அறைக்குள் அவர் அமர்ந்திருந்தார். ஆனால், அவர் வேறு சில காரணங்களுக்காக இந்தத் தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக முதலில் தகவல்கள் வெளியானது.
ஆனால், அவற்றை மறுத்த ஹர்ஷத், ‘இதைத் தவிர உயிர் வாழ்வதற்கு எனக்கு வேறு வழியே தெரியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தன்று சில மருந்துகள் வாங்கக் கூட பணம் இல்லாமல், வீட்டில் பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுள்ளார் ஹர்ஷத். அதனைத் தொடர்ந்தே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
ஹர்ஷத்தின் இந்த வித்தியாசமான தற்கொலை முயற்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து, அவரது வேலை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என உயிரியல் பூங்கா மற்றும் அருங்காட்சியக அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு இந்த வேலையில் சேர்ந்துள்ளார் ஹர்ஷத். ஆரம்பத்தில் நாளொன்றிற்கு ரூ. 91 சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது அது தினமும் ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது. பூங்காவில் இருந்து 27 கிமீ தொலைவில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஹர்ஷத்திற்கு, இந்த வருமானம் போதுமானதாக இல்லையாம்.
ஹர்ஷத்தின் குடும்பத்தார் சர்க்கஸில் பணி புரிந்தவர்கள். தானும் அவர்களைப் போல் ஆகாமல், குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்காகவே பூங்கா பணியில் சேர்ந்துள்ளார் அவர்.சர்க்கஸுக்குப் போயிருந்தால் நிச்சயம் ஊதியம் கூடுதலாக கிடைத்திருக்கும். ஆனால் நான் போகவில்லை.மாறாக இங்கு மாதம் ரூ. 20,000 சம்பளமாக கிடைக்கும் என நம்பினேன். ஆனால் தரவில்லை என்றார் ஹர்ஷத்.
ஹர்ஷத்தின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து அவரை நீண்ட விடுப்பில் செல்ல பூங்கா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இரண்டே நாட்களில் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பி விட்டார். விரைவில் தனது நிரந்தர பணி நியமன உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஹர்ஷத், மீண்டும் இது போன்ற தற்கொலை முயற்சியை மேற்கொள்ளமாட்டேன் என உறுதிபடக் கூறுகிறார்.