விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல்
இந்தூர்: விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நபர்களுக்கு அவை குறித்து ஒன்றும் தெரியாது என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், போராட்டம் நடைபெறும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் போராடும் இடங்களில் கூடுதலாக நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றும் தெரியாது
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று பாஜக எம்எல்ஏக்களுக்கு பயிற்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பயிற்ச்சி கூட்டத்தைத் தொடங்கி வைத்த வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தச் சட்டங்கள் குறித்து கருத்து கூறுகின்றனர். அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, பின்னர் ஏன் அவர்கள் விவசாயிகள் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தும் ராகுல் காந்தி உள்ளிட்ட மற்றவர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து ஒன்றும் தெரியாது" என்றார்.
உரிமை இல்லை
தொடர்ந்து ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசிய அவர்,"ராகுல் காந்தியிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு இந்தச் சட்டங்கள் பற்றி கருத்து தெரிவிக்க எவ்வித உரிமையும் இல்லை. காங்கிரஸ் கட்சியினரே ராகுல் காந்தி கூறுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காங்கிரஸ் மிக வேகமாகப் பலவீனமாகி வருகிறது. எந்தவொரு ஜனநாயகத்திற்கும் பலவீனமான எதிர்க்கட்சி நல்லதல்ல "என்றும் அவர் கூறினார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
விவசாயிகளின் போராட்டம் குறித்துப் பேசிய நரேந்திர சிங் தோமர், "விவசாயிகள் போராட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாங்கள் எங்கள் திட்டத்தை மிகத் தெளிவாக அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். இதேபோல விவசாயிகளும் அவர்கள் திட்டத்தைத் தெரிவித்தால், பேச்சுவார்த்தையைத் தொடர முடியும்" என்றார்.
உடன்பாடு இல்லை
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்றுள்ள 11 கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, வேண்டுமானால் 18 மாதங்கள் வரை நிறுத்த வைக்கத் தாயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயச் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.