சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கி சாக வேண்டும்: பாஜக எம்.பி. திமிர் பேச்சு
டெல்லி: யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கடலில் மூழ்கி சாக வேண்டும் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத்(42) வாரணாசியில் உள்ள கோவில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சூரிய நமஸ்காரம்
யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். சூரிய கடவுளுக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் வாழ வேண்டும்.
யோகா
சூரிய நமஸ்காரம் யோகாவின் ஒரு பகுதி. சூரிய நமஸ்காரம் செய்வது மனதிற்கு நல்லது. 40 முஸ்லீம் நாடுகள் உள்பட 100 நாடுகளில் வரும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
முஸ்லீம்கள்
சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதில் பிரச்சனை இல்லை என்றால் முஸ்லீம்கள் ஏன் சூரிய நமஸ்காரத்திற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? சூரியனை ஒரு சமூக பிரச்சனையாக ஆக்க முயற்சி செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் கழிக்க வேண்டும் என்றார் யோகி ஆதித்யநாத்.
நீக்கம்
சூரிய நமஸ்காரத்திற்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் இருந்து அந்த ஆசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.